திருப்புத்தூர், மார்ச் 4: திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மதிய உணவு இடைவேளையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். வட்ட கிளைத்தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். இதில், ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட 17 (ஆ) குற்றச்சாட்டு குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கிட வேண்டும்.
பழிவாங்கும் வகையில் பிறப்பித்த மாவட்ட மாறுதல்களை ரத்து செய்தல் வேண்டும். கோவை மாவட்ட நான்கு தோழர்களின் மாவட்ட மாறுதல் உத்தரவை ரத்து செய்து மீளவும், கோவை மாவட்டத்தில் பணியமர்த்திடல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் திருப்புத்தூர் வட்ட கிளைத் துணை தலைவர் ஜெகன், செயலர் நாச்சியப்பன், பொருளாளர் கார்த்திக், மாவட்ட தணிக்கையாளர் தனபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார், மாவட்ட மகளிர் குழு மலர்விழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.